இறந்து போன நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது இயலாதது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இறந்து போன அடையாளம் தெரியாத நபரின் அடையாளத்தை கண்டறிவதற்காக அந்த நபரின் கைரேகை மூலம் விவரங்களை வழங்க UIDAI அமைப்புக்கு உத்தரவிடக்கோரி திண்டிவனம் டிஎஸ்.பி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, UIDAI அமைப்பின் துணை இயக்குநர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆதார் தொடர்பான தகவல்களை அளிப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளதாகவும்,அரசின் மானியம் உரிய முறையில் செல்வதை உறுதி செய்வதே அதன் நோக்கம் என கூறப்பட்டுள்ளது. மேலும், தனி நபரின் நடவடிக்கையை கண்காணிப்பது அல்ல என தெரிவித்துள்ளது.