பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவர் பெயரில் 3 கோடி ரூபாய் மதிப்பில் திருமண மண்டபம் கட்டித் தரப்படும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில், அவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது:இந்திய விடுதலைப் போராட்டத்தில், தன்னையே ஒப்படைத்து, உழைத்த தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம். அறம் வளர்த்த பாண்டிய மன்னர்கள் ஒருமித்த இளவல் போல, கம்பீரமாக தேவர் காட்சியளிப்பதாக அண்ணா பாராட்டினார். 1963ல் தேவர் உயிரிழந்தபோது, அண்ணாவும், கருணாநிதியும், எம்ஜிஆரும் இந்த பசும்பொன் வந்து அஞ்சலி செலுத்தினர்.பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தை 1969ல் பார்வையிட்டு, 1974ல் மணி மண்டபமாக உருவாக்கி கொடுத்தவர் கருணாநிதி. பாம்பன் பாலத்தை கட்டிய நீலகண்டன் தான், இந்த மணி மண்டபத்தையும் கட்டினார். அதேபோல, மூக்கையா தேவரின் முயற்சியால் அமைக்கப்பட்டு, மதுரையில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் தேவர் சிலை திறப்பு விழாவுக்கு அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த வி.வி.கிரியை அழைத்துவந்து தலைமை வகித்தவரும் கருணாநிதி தான்.மதுரை ஆண்டாள் புரம் பாலத்துக்கு, தேவர் பெயரை சூட்டியதும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தேவர் பெயரால் ரூ.25 லட்சம் மதிப்பிலான அறக்கட்டளையை உருவாக்கியவரும் கருணாநிதி தான்.2007ல் முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவை மாபெரும் அரசு விழாவாக கொண்டாடியதும், தேவரின் நினைவிடத்தில் அணையா விளக்கை அமைத்தது, தேவர் இல்லத்தை ரூ.10 லட்சத்தில் புதுப்பித்தது, ரூ.9 லட்சத்தில் தேவர் நூற்றாண்டு விழா வளைவு அமைத்தது போன்றவற்றை செய்தது கருணாநிதி தான்.முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி பசும்பொன் கிராமத்துக்கு மட்டும் 2 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயில் பணிகளை செய்தது திமுக அரசு தான். 1989ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்கி, கல்வி, வேலைவாய்ப்பில் இந்த சமூக மக்கள், முன்னேற வாய்ப்பை உருவாக்கியவர் கருணாநிதி. பசும்பொன் தேவர் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதும், அந்த கல்லூரிக்கு 44 ஏக்கர் நிலத்தை வழங்கியதும் கருணாநிதி அரசு தான். அந்த கல்லூரியை சிலர் சீர்குலைத்தபோது, எனது அரசு அதில் தலையிட்டு இப்போது சிறப்பாக இயங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.தேவர் நினைவிடத்தில் ரூ1.55 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தெய்வத் திருமகனார் அரங்கத்தை கடந்த ஆண்டு, நான் திறந்து வைத்தேன். இப்போது பசும்பொன்னில் புதிதாக திருமண மண்டபம் அமைக்க வேண்டுமென ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. அதனை உடனடியாக ஏற்று, ரூ.3 கோடியில் இங்கே தேவர் பெயரில் திருமண மண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சமூக வலை தளத்தில் பதிவு... இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:அடக்குமுறை சட்டங்களின் ஆதிக்கத்தில் இருந்து நம் மக்களை மீட்டு, நேதாஜி அவர்களின் நம்பிக்கைக்குரியவராக நாட்டு விடுதலைக்குப் போராடிய தீரர் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தியில் அவரது திருவுருவச் சிலைக்கும், பசும்பொன் நினைவிடத்திலும் எனது மரியாதையைச் செலுத்தினேன். மேலும், மதுரை தெப்பகுளத்தில் மானம் காத்த மருதிருவர் திருவுருவச் சிலைக்கும் மலர் மாலை அணிவித்து வணங்கினேன்.பசும்பொன்னில் மாபெரும் திருமண மண்டபம் கட்டப்படும் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்ட மன நிறைவுடன் சென்னைக்குத் திரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதையும் பாருங்கள்... முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா, முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை | thevar guru puja 2025 | CM Speech