வாகனங்கள் மீது ஏறக் கூடாது, கையில் குச்சி போன்ற ஆயுதங்களை வைத்திருக்க கூடாது என விஜய் பிரச்சாரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தவெக தலைவர் விஜய், நாமக்கலில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக செல்லும் அவருக்கு வழி நெடுகிலும் ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். விஜய் பிரச்சாரம் நடத்த இருக்கும் நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.தியேட்டர் எதிரே, காலை முதல் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர். முன்னதாக, விஜய் பிரச்சாரத்திற்கு அவரது ரசிகர்களுக்கு 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆம்புலன்ஸ் வசதி மற்றும் தண்ணீர் பாட்டில் என அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும், பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கையில் குச்சி, கம்பு போன்ற ஆயுதங்களை வைத்திருக்க கூடாதுபெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், வாகனத்தில் வரும்போது, வாகனத்தின் முன்பின் பக்கங்கள் மற்றும் மேற்கூரையில் ஏறிக்கொண்டு சக பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது, அவ்வாறு சேதம் ஏற்படுத்தினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும், பயண வழிப்பாதை மற்றும் பரப்புரை நடக்கும் இடத்தில், பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் வைத்திருக்கக் கூடாது, பரப்புரை முடிந்தவுடன் தவெக தலைவர் செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து செல்ல கூடாது.பரப்புரை இடத்திற்கு அருகில் உள்ள உயர் அழுத்த மின் கோபுரங்கள் மற்றும் உயர் கட்டிடங்கள் மீது ஏறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.