ஆந்திராவில் இருந்து, கிருஷ்ணகிரி வழியாக, மதுரைக்கு காரில் கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டு, 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, குப்பம் செல்லும் சாலையில் உள்ள சசின்னேப்பள்ளி என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆந்திர பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்தக் காரில் 100 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. காரில் இருந்த மதுரை அய்யப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெள்ளபாண்டி, ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த வேணுகோபால், ஹரி கிருஷ்ணா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.