தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிறந்து 1-மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாலையில் வீசி சென்ற கொடூர தாய். குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கொம்மநாயக்கனஅள்ளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஓரம் தரைப்பாலத்தின் அடிப்படையில் பச்சிளம் குழந்தை அழுகுரல் கேட்டது ,அவ்வழியாக சென்றவர்கள் குழந்தையின் அழுகுரலை கேட்டு அருகே சென்று பார்த்த போது பிறந்து சில மணி நேரமே ஆன பெண்குழந்தையை சாக்கு பையில் சுருட்டி வைத்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாக பாலக்கோடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க்கு வந்த காவல் துறையினர் குழந்தையை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சாந்தி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று குழந்தையை பார்த்து மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க ஆலோசனை வழங்கினார்.அதனை தொடர்ந்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தொட்டில் குழந்தைகள் மையத்திற்க்கு அனுப்பி வைத்தனர்.சமீப காலமாக தருமபுரி மாவட்டத்தில் கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில் ,பிறந்து சில மணி நேரத்திலேயே பச்சிளம் பெண் குழந்தையை சாலையில் வீசி சென்ற சம்பவம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.