சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் கோவிந்தா- கோவிந்தா பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கியுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்துள்ளது. கோவிந்தா பாடலில் சுவாமி வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில் வரிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரி, வழக்கறிஞர் எம்.ஜி.டி. பாலாஜி வழக்கு தொடர்ந்தார். இது, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எந்த மதங்களுக்கும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்த நிலையில், பாடல் டியூன் மியூட் செய்யப்பட்டு விட்டதாக பட தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வெள்ளிக்கிழமை விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி, விசாரணையை ஒத்திவைத்தனர்.